‘பூமணி’, ‘பூந்தோட்டம்’, ‘கிழக்கும் மேற்கும்,’ ‘மிட்டாமிராசு’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் மு.களஞ்சியம் தற்போது, கதை, திரைக்தை, வசனம் எழுதி இயக்கி நடிக்கும் படம் ‘கருங்காலி’. இந்த படத்தை ஸ்ரீகுருஜோதி பிலிம்ஸ் சார்பில் ஜி.விவேகானந்தன் தயாரித்திருக்கிறார். மு.களஞ்சியத்தை, ‘பூமணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தியதும் இவர்தான்.
புதுமுகம் சீனிவாசன் கதாநாயகனாக நடிக்க. அங்காடித் தெரு அஞ்சலி, 6.2 படத்தில் நடித்த சுனிதா வர்மா, வில்லாளன், சாமிப்பிள்ளை படங்களில் நடித்து வரும் அஸ்மிதா மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அலெக்ஸ், பையா படத்தில் வில்லனாக நடித்த பொன்முடி ஆகியோர் நடிக்கிறார்கள். கட்டதொட்டி, சத்தியவாணிமுத்து நகர், தாலங்குப்பம், காசிமேடு பகுதிகளில் இருந்து முப்பது பேரை தேர்வு செய்து, தியேட்டர் லேப் ஜெயராவ் என்பவர் மூலம் அவர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
இப்படத்தின் அறிமுகவிழா ஏ.வி.எம் ஏசி திரையரங்கில் நடைபெற்றது, அப்போது படம் பற்றி நிருபர்களிடம் இயக்குனர் மு.களஞ்சியம் பேசுகையில், “இந்தப் படத்தில் சேரிப்பகுதியைச் சேர்ந்த பொட்டலம் ரவி என்ற இளைஞனாக நான் நடிக்கிறேன். கஞ்சா வியாபாரியான அவன் முரட்டுத்தனமானவன். கருங்காலி என்ற படத்தின் தலைபபு அந்த கதாபாத்திரத்தையே குறிக்கும்.
படிக்காத, அப்பாவி கிராமத்துப் பெண்ணாக அஞ்சலி நடிக்கிறார். சாப்ட்வேர் என்ஜினியரை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு வரும் நகர வாழ்க்கையில் ஒட்டமுடியாமல் தவிப்பவர். சுனிதா வர்மா மேட்டுக்குடியைச் சேர்ந்தவர். டாக்டர் .அஸ்மிதா சேரியிலேயே பிறந்து வளர்ந்த பெண். இந்த மூன்று பெண்களும் இணைகிற நேர்கோடு, மையப்புள்ளிதான் கருங்காலி. எல்லா வகையிலும் வேறுபட்ட இந்த நால்வரைச்சுற்றி நிகழும் கதைதான் கருங்காலி.
படித்துவிட்டு பெரிய வேலையில் இருக்கும் இளம் தம்பதிகள் மத்தியில் இன்றைக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது செக்ஸூவல் பிரச்சினைதான். அதனாலேயே விவாகரத்துக்களும் அதிகமாக இருக்கின்றன. இதைப்பற்றி உளவியல் ரீதியாக பேசுகிற படம் மட்டும் அல்ல, நான் முதன்முறையாக நடிக்கும் படமும் கூட. எனவே நான் அதிகபட்ச உழைப்பைக் கொட்டி இந்தப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். என் கேரியரில் மட்டுமல்ல, சமீபகாலப்படங்களிலும் மிகச்சிறந்த படமாக கருங்காலி பேசப்படும்”
என்கிற மு.களஞ்சியம் நடிகராக அவதாரம் எடுப்பதற்காக கடுமையான உடற்பயிற்சிகள், கராத்தே மற்றும் நடிப்பு, நடனப் பயிற்சிகள் என ஒரு நடிகனுக்கு அவசியமான அத்தனை விஷங்களிலும் தன்னை தயார்படுத்திக் கொண்டதாகச் சொல்கிறார்.
இப்படத்துக்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்திருக்கிறார். ஜி.ஏ.சிவசுந்தர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எல்.வி.கே.தாசன் படத்தொகுப்பு செய்கிறார். இளையகம்பன், குகை மா.புகழேந்தி, ஈரோடு இறைவன் போன்றவர்கள் பாடல்கள் எழுதியிருக்கின்றனர். ராபர்ட், பாலகுமார், ரேவதி, ரமேஷ் ரெட்டி போன்றவர்கள் நடனம் அமைத்துள்ளனர். ராஜசேகர் சண்டைபயிற்சி அளித்துள்ளார்.