போதை மருந்துக் கும்பலுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக வந்த செய்தி பொய்யானது. என்மீது வேண்டுமென்றே அவதூறு கிளப்புகிறார்கள். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என த்ரிஷா கூறியுள்ளார். ஐதராபாத்தில் நைஜீரியாவை சேர்ந்த சிலரிடம் கோகைன் போதை மருந்து வாங்கிய தெலுங்கு முன்னணி நடிகரான ரவிதேஜாவின் சகோதரர்கள் ரகுநாத ராஜு (எ) ரகுபாபு, பரத்ராஜு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த போதை கும்பலுடன் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த போதை கும்பலுடன் நடிகை த்ரிஷாவுக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டு ஐதராபாத்தில் செய்திகள் வெளியாயின. இது தென்னிந்திய சினிமா உலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொடைக்கானலில் கமல்ஹாசனுடன் ‘மன்மதன் அம்பு’ ஷூட்டிங்கில் இருக்கும் த்ரிஷாவுக்கு அடுத்தடுத்து போன் கால்கள் போயிருக்கிறது. நண்பர்கள் மூலம் விஷயம் அறிந்த த்ரிஷா, அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி த்ரிஷா கூறியதாவது:
கடந்த பல மாதங்களாக நான் ஐதராபாத்துக்கு செல்லவில்லை. தமிழ், இந்தி படங்களில் மட்டுமே நடிக்கிறேன். ‘மன்மதன் அம்பு’ பட ஷூட்டிங்கிற்காக நீண்ட நாட்களாக இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தேன். சமீபத்தில்தான் சென்னை வந்தேன். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ இந்தி ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூலை முடித்தேன். உடனே ‘மன்மதன் அம்பு’ படப்பிடிப்புக்காக கொடைக்கானல் வந்துவிட்டேன். இப்படி அடுத்தடுத்து ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன். இந்நிலையில் நேற்று திடீரென ஐதராபாத்திலிருந்து எனது பிரெண்ட் ஒருவர் போனில் இந்த விஷயத்தை சொன்னார். அதிர்ந்து போய்விட்டேன். இதில் துளி கூட உண்மையில்லை. எனது இமேஜை சிலர் கெடுக்க நினைக்கிறார்கள். இந்தி சினிமாவிலும் நான் நுழைந்திருக்கிறேன். எனது வளர்ச்சியை பொறுக்காமல் சிலர் செய்யும் சதிதான் இது. வதந்தி பரப்பியவர்களை சட்டப்படி இதை சந்திக்கப் போகிறேன். எனது வக்கீலிடமும் பேசியிருக்கிறேன். இது பொய்யான தகவல் என்பதை மீடியாவுக்கு தெரிவிக்கும்படி எனது வக்கீல் அறிவுறுத்தினார். இந்த புரளியை கிளப்பியது யார் என தெரிந்ததும் உடனே நடவடிக்கை எடுப்பேன்.