
தமிழ்ப்படம் தயாரித்த y not studio சார்பில் சசிகாந்த் தயாரித்திருக்கும் புதிய படம் ‘வ குவாட்டர் கட்டிங்’. இந்த படத்தை க்ளவ்டு நைன் நிறுவனத்தின் சார்பில் தயாநிதி அழகிரி வெளியிடுகிறார். ஆர்யா நடித்த ‘ஓரம்போ’ படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி தம்பதியினர், இந்த படத்தை இயக்கியிருக்கின்றனர். சிவா கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக லேகா வாசிங்டன் நடித்திருக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்கள் அடங்கிய முதல் குறுந்தகட்டை நடிகர் சூர்யா வெளியிட, இயக்குநர் லிங்குசாமி பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் சசிகாந்த் பேசுகையில், “நான் ஏன் இந்த மாதிரியான வித்தியாசமான படங்களை தயாரிக்கிறேன்னு, நிறைய பேர் கேட்குறாங்க. அதுக்கு ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். 1928-ல் அறிஞர் அண்ணாவை பார்க்க தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார் காந்தியடிகள். அவருடைய நோக்கம் என்னன்னா, ஹிந்தியை தேசிய மொழி ஆக்குவது குறித்து அண்ணாவிடம் பேச வந்திருந்தார். ஏன் ஹிந்தியை தேசிய மொழி ஆக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார், அண்ணா. அதற்கு, காந்தியடிகள் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் அந்த மொழியை பேசுறாங்க. தமிழ் நாட்டில் உள்ளவங்களையும் அந்த மொழியை பேச வைக்க வேண்டும் என்று கூறினாராம். அதற்கு அண்ணா, அப்படி பார்த்தால் நம் நாட்டின் தேசிய பறவை மயிலாக இருக்க முடியாது. காகாதான் தேசிய பறவையாக இருக்க முடியும் என்று கூறினாராம். ஏன் என்றால். இந்தியா முழுக்க காகா பறக்கிறது, மயில் இல்லை என்றாராம். அந்த வகையில் நாங்கள் காகாவைவிட்டு விட்டு, மயிலை தேடுறோம்” என்றார்.
இயக்குநர் புஷ்கர் காயத்ரி பேசுகையில், “வ குவாட்டர் கட்டிங்” இந்த வ என்பதற்கு அர்த்தம் என்னன்னு பலரும் கேட்கின்றனர். அதற்கு அர்த்தம் ‘வ’ என்றால் தமிழில் ‘1\4′ என்று அர்த்தம்” என்றார்.
தயாநிதி அழகிரி பேசுகையில், “இந்த படத்தின் தலைப்பு ஆங்கிலமா, தமிழா என்ற சந்தேகம் வேண்டாம். இது தமிழ் டைட்டில்தான். வ என்பதுதான் டைட்டில். குவாட்டர் கட்டிங் என்பது சப்-டைட்டில்தான்” என்றார்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாரயணன், அமிர்தம், சரத், அருள்பதி, நடிகர்கள் சூர்யா, ஆர்யா, சிவா, இயக்குநர்கள் தரணி, மிஷ்கின், விஷ்ணுவர்தன், விஜய், வெற்றிமாறன், புஷ்கர் – காயத்ரி, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
