வெட்டியாக சுற்றும் இளைஞன், காதலியை கைபிடிப்பதற்காக சபதம் எடுக்கும் கதை.கோவில் நகரமான கும்பகோணத்தில் ஆர்யா, அவருடை ய அம்மா, அண்ணன், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். ஆர்யாவின் அண்ணன் சரவணன் வெட்னரி டாக்டராக வேலை பார்க்கிறார். ஆர்யா டிகிரி முடிக்கனும்னு அரியர் கிளியர் பண்ண முயற்சி செய்து செய்து செய்துகிட்டே இருக்கிறவர். அப்படி ஒரு நாள் அரியர் எக்ஸாம் எழுத போகும் போது பஸ்ஸில் நயன்தாராவை பார்க்கிறார். பார்த்தவுடன் அவருக்கு பிடித்து போகிறது.
இந்த நிலையில் ஆர்யாவின் அண்ணனுக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் முடிவாகிறது. விஜயலட்சுமியின் தங்கைதான் நயன்தாரா என்று ஆர்யாவுக்கு தெரிய வர, சந்தோஷம் அதிகமாகிறது. நயன்தாராவை அடிக்கடி சந்திப்பதும், அவரது நினைவாக இருப்பதுமாக இருப்பவருக்கு இது பெரிய வாய்ப்பாக அமைகிறது. அவரிடம் திருமணம் பற்றி பேசுகிறார். அதற்கு நயன்தாரா, என் அக்காவிடம் அதைப் பற்றி பேசு என்கிறார். ஆரியா விஜயலட்சுமியிடம் நயன்தாரா பற்றிய விஷயங்களை சொல்ல, விஜயலட்சுமி கோபமாகிறார்.
முதலில் வேலைக்கு சென்று கை நிறைய சம்பாரித்து உன் தங்கையை திருமண்ம செய்து கொடு, அடுத்து உன் திருமணம் பற்றி பேசு என்று ஆரியாவிடம் சொல்ல, நான் சம்பாதித்து காட்டுகிறேன் என்று வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஆரியா.
சந்தானத்தின் உதவியோடு, டுடோரியல் சென்டர் வைத்து உயர்கிறார். நயன்தாரா சொன்னது போல தங்கையின் திருமணத்தை முடித்து வைத்து, தனது திருமணம் பற்றி பேச, அதற்கு நயன்தாராவின் தந்தை மறுப்பதோடு, ஒரு பிரபல பிஸினஸ்மேன் மகனுக்கு நயன்தாராவை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்கிறார். நயன்தாராவை எப்படி ஆரியா கை பிடிக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.
கதை சுருக்கத்தை படித்துவிட்டு சீரியஸான படம் என்று நினைக்க தோன்றும். ஆனால் இது முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகள் நிறைந்த, சிரிக்க உத்திரவாதம் உள்ள படம்.
பாஸ் (எ) பாஸ்கரனாக, ஆர்யா டீன் ஏஜ் வயதின் சுட்டிதனத்தை, இளைஞர் பருவம் வரை கடைபிடித்து ஊரிலும், வீட்டிலும் வெட்டி பையனாக பேர் எடுக்கும் கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார். அவருடைய டைமிங் ரியாக்ஷன்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து, கைதட்டலை அள்ளுகிறார். படம் முழுக்க ஜீன்ஸ் பேன்ட், சட்டை என அசத்தலான அழகில் வலம் வந்திருக்கிறார். அவர் கூலிங் கிளாஸ் மாட்டுவதும், கழட்டுவதும் என தன்னுடைய ஒவ்வொரு மேனரிசத்திலும் கதையின் நகைச்சுவை பாதிப்பு இருப்பதால். நல்ல முத்திரையான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஆர்யா.
நயன்தாராவும் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். சீரியஸாக ஆர்யாவுக்கு அட்வைஸ் செய்வது. ஆர்யா தன்னை இம்ப்ரஸ் பண்ண வரும் போதெல்லாம் அவரை அணுகும் முறையில் அசத்தல். கோபமாக பேசும்போது காமெடி வரனும் என்ற படத்தின் கான்செப்டில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
ஆரியாவிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு படும் சந்தானத்தின் காமெடியில் தியேட்டரில் சிரிப்பு மழை. அவரின் டைமிங் சென்ஸ்க்கு ஒவ்வொரு முறையும் கைதட்டலால் தியேட்டர் அதிர்கிறது. படம் முழுக்க வரும் அவர் படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம். நகைச்சுவை நண்பன்டா
ஆர்யாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுப்பு பஞ்சுவும் நகைச்சுவையில் அசத்தியிருக்கிறார். அவருடைய எதார்த்த நடிப்பு தியேட்டரில் விசில் சத்தம். அவரது மனைவியாக விஜயலட்சுமி அசத்தால நடிப்பு.
வட்டிக்கு விடும் நான் கடவுள் இதில் காமெடியில் அசத்தியிருக்கிறார். அவரது மகனாக வரும் அஸ்வின்ராஜ், கதையில் முக்கியமான ஒரு கதாபாத்திரம். சாப்பிடுவதும் தூங்கி வழிவதுமாக இருக்கும் அவர், படிப்பதற்காக முயற்சி செய்கிற காட்சிகளிர் சிரிப்பு வெடி.
கெளரவ கதாபாத்திரத்தில் இரண்டு காட்சிகளில் நடித்து மனதில் நின்று விடுகிறார் ஜீவா. நயன்தாரா தந்தையாக வரும் சித்ரா லட்சுமணன், ஆர்யா தாயக வரும் லஷ்மி ராமகிருஷ்ணன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரது கதாபாத்திரமும் படத்தின் பலம். அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையில் யார் இந்த பெண்தான்… பாடல் எல்லோரையும் முனுமுனுக்க வைக்கும் பாடல். மற்ற பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். சில இடங்களில் பழைய படத்தின இசையை காட்சிக்கு பொருத்தமாக தந்திருப்பது நல்ல ரசனை.
கும்பகோணத்தில் வாழ்ந்துவிட்டு வந்த திருப்தியை சக்தி சரவணனின் ஒளிப்பதிவு உணர்த்துகிறது. ஒவ்வொரு பாடல் காட்சியிலும் ரசிக்க வைக்கின்ற பேக்ட்ராப் கலரில் பிரேம்களில் அசத்தல் ரசனை.
முழுக்க முழுக்க சிரிக்க வைக்க எடுத்திருக்கும் முயற்சியில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.எம். அழகான காதல் கதையை குடும்ப உறவுகள், நட்பு வட்டாரம் என சுற்றி காமெடி இழையால் பிண்ணி ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து வெற்றியை பெற்றிருக்கும் ராஜேஷை பாராட்டாமல் இருக்க முடியாது. இவர் ஏற்கனவே இயக்கிய சிவா மனசுல சக்தியை விட இந்தப் படத்தில் நகைச்சுவை அதிகமாகவே இருக்கிறது.
பாஸ் (எ) பாஸ்கரன் – கல கல ரகளையில் பாஸ்.
-எஸ்.செல்வநாதன்
