Sunday, May 20th, 2012
Pirapalam.Com

180

Published on July 2, 2011 by   ·   No Comments

தலைப்பை பார்த்ததுமே ஏதோ வித்தியாசமா செய்யப்போறாங்கனு ஒரு ஈர்ப்பு. படத்தோட ஸ்டில்ஸ் பார்க்க கலர்ஃபுல்லா இருந்துச்சு. மணிரத்னம் பட்டறையிலிருந்து விளம்பர உலகில் பிரபலமான ஜெயேந்திரா 500க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களை இயக்கியவர், இவர் இயக்கியுள்ள முதல் திரைப்படம் 180(நூற்றெண்பது). வரிவிலக்கு கிடச்சுச்சானுதான் தெரியல. அடுத்த எதிர்பார்ப்பு சித்தார்த். ‘பாய்ஸ்’ல பார்த்த பையன். ஏழு வருஷம் இந்தி, தெலுங்குனு சுத்திட்டு தமிழுக்கு திரும்பியிருக்கிறார். இப்ப இன்னும் க்யூட்டா இருக்கிறார். சரி.. சரி.. படம் எப்படியிருக்குனு பார்ப்போம்…

காசியில அப்பாவுக்கு திதி கொடுத்துட்டு வர்றாரு நம்ம ஹீரோ சித்தார்த். அதே போல ஒரு சிறுவனும் அவனது தந்தைக்கு இறுதிக்காரியங்களை செய்கிறான். அது முடிந்ததும் தனது பொம்மை காரோடு விளையாடப் போய்விடுகிறான். அங்கு தன் தகப்பனுக்கு திதி கொடுப்பதைக் கூட உணராத சிறுவனிடம் ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்க.. அவன் மனோ என்கிறான். பதிலுக்கு சிறுவன் உன் பெயர் என்ன? என்று கேட்கும் போது ‘நானும் மனோவா இருக்கக்கூடாதா?’ என்று கேட்டு தன் பெயரும் இனி மனோ என்கிறான். இப்படி ஆரம்பிக்கிறது சித்தார்த்தின் அறிமுகம். அங்கிருந்து கிளம்புகிறவன் ஆட்டோவில் ஏறி தன் இரண்டு விரல்களைக் காட்டி அதில் ஒன்றை தொடச் சொல்லி, அது சொல்லும் வழியில் ஆட்டோவை போகச் சொல்கிறான். இப்படி அடுக்கடுக்காக சின்ன சின்ன ஆர்வக் காட்சிகளுடன் படம் ஆரம்பிக்கிறது.

சென்னைக்கு வருகிறார் சித்தார்த், ஆறுமாதம் தான் இங்கு இருப்பேன் என்று ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். அந்த வீட்டின் ஆறு மாத வாடகை தொகையை மொத்தமாக கொடுக்கிறார். அதேபோல அந்த வீட்டின் உரிமையாளரின் பைக்கை வாடகைக்கு எடுக்கும் சித்தார்த், அந்த தொகையையும் ஆறு மாதத்திற்கு சேர்த்து மொத்தமாக கொடுக்கிறார். இப்படி எதை எடுத்தாலும் ஆறு மாதம்தான் என்று சொல்லிக்கொண்டு, சுண்டல் சிறுவனை பந்து விளையாட சொல்லிவிட்டு தானே சுண்டல் விற்கிறார். அயர்ன் கடைக்காரருக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு அவர் வேலையை இவர் செய்கிறார். பேப்பர் போடுகிறார். மசாஜ் செய்கிறார். பஸ் ஸ்டாண்டில் தவிக்கும் ஆயாவை பைக்கில் ஏற்றி ட்ராப் பண்ணுகிறார். சிறுவர்களை படிக்க வைக்க முயற்சி செய்வது என்று ரொம்பவே சந்தோஷமாக சுற்றி வருகிறார். இவ்வளவும் திணிக்கப்பட்டது போல இல்லாமல் இயல்பாக நடக்கிறது. நமக்கே அப்படியெல்லாம் இருக்க ஆசை வருகிறது. இப்படிப்பட்டவரை ஒரு பெண் பார்த்தால் என்னாகும்? சித்தார்த்தின் இந்த நடவடிக்கைகளை பார்த்து பிரஸ் போட்டோகிராபர் நித்யா மேனன் ஃபாலோ செய்ய, இருவருக்கும் வருகிறது நட்பு. ரெண்டே ரீலில் அது காதலாக மாற, தன் காதலை சித்தார்த்திடம் சொல்ல, விலகிப் போகிறார் சித்தார்த். விடாமல் துரத்துகிறார் நித்யா. இதனிடையே ஒரு ஆக்சிடெண்டில் நித்யா சிக்கிக்கொள்கிறார். அவரது மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு கூட்டிச் செல்லும் பொறுப்பு சித்தார்த்தின் மேல் விழுகிறது. வேறு வழியின்றி கூட்டிச் செல்கிறார்.

அங்கதான் பிளாஷ் பேக் வருகிறது.. அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோவில் மருத்துவராக பணியாற்றுகிறார் அஜய்(இதே சித்தார்த் தான்!). அமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் சித்தார்த், ப்ரியா ஆனந்த்தை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். காதல் கனியும் முன் திடீரென்று யாரிடமும் சொல்லாமல், தான் இறந்துவிட்டதை போல ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிட்டு அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வருகிறார். ஆசை ஆசையாய் காதலித்த மனைவியை விட்டுட்டு வர காரணம் என்ன? மீண்டும் அமெரிக்கா போன சித்தார்த் மனைவியை சந்தித்தாரா? நித்யா மேனனை ஏற்றாரா? என்பதுதான் க்ளைமாக்ஸ்!

கதையெல்லாம் ஓ.கே. ஆனா எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு. அதவிடுங்க இந்த ’180′ டைட்டில் எதற்கு? ஓ.. சொல்ல மறந்துட்டேன்ல.. நம்ம சித்தார்த்துக்கு கணையத்துல கேன்சர். அவரு இனி உயிரோட இருக்கப்போறது தமிழ் சினிமாவின் இலக்கணப்படி ஆறே ஆறுமாசந்தான்(தூ… எவன்டா கண்டுபிடிச்சது இந்த ஆறு மாச கணக்க) 6X30= 180. இப்போ புரிஞ்சிருக்குமே படத்தோட தலைப்பு.(யம்மா தாங்கலடா சாமி!)

சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாயிடும்ல அதுக்குத்தான் மனைவிய பிரிஞ்சு வந்திடுறாரு. காசியில ஞானோதயம் பிறக்குது. வாழ்க்கையில் மரணம் வரத்தான் செய்யும், அதனால இருக்குற வரைக்கும் மகிழ்ச்சியாக இருக்கணும்னு முடிவு பண்றாரு. இதுதாங்க மொத்த படமுமே.

சும்மா சொல்லக் கூடாது சித்தார்த் நல்லாவே நடிச்சிருக்காரு. அறிமுகக் காட்சியிலேயே ஈர்க்கிறார். போகப்போக மெல்ல நம் மனதில் உட்காருகிறார். ஸ்மார்ட்டாக இருக்கிறார். டிசைனர் ட்ரஸ்சுகளில் பார்க்க ரொம்ப அழகாத் தெரியுறாரு. இப்பல்லாம் அழுக்கு மூஞ்சி, பரட்ட தலைன்னு பார்த்து பார்த்து அலுத்துப்போச்சு.(தமிழ் ரசிகைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்). டாக்டர் அஜய்க்கும், சென்னை பையனாக சுற்றும் மனோவுக்குமான வித்தியாசத்தை நன்கு உணர்ந்து செய்திருக்கிறார். காஸ்ட்யூம்ஸ், பாடி லாங்குவேஜ் எல்லாமே சூப்பர். செகண்ட் இன்னிங்ஸ்லயும் ஒரு ரவுண்ட் வரலாம்.

அமெரிக்க காதலியாய் வரும் ப்ரியா ஆனந்த் க்யூட்டாகவும், செக்ஸியாகவும் இருக்கிறார். இளமை துள்ளும் சிரிப்புடன் நம் மனதை கவர்கிறார்.

சித்தார்த்தை காதலிக்கும் சென்னை பெண் நித்யா மேனன் வரும் காட்சிகள் மிக கொஞ்சமே என்றாலும் பரபரக்கு பஞ்சமில்லை. துறுதுறு கண்களால் கவர்கிறார். ஒரு சில சந்திப்புகளிலேயே டமால் என்று சித்தார்த்திடம் விழுந்துவிடுகிறார். அது செயற்கையாக வெளிப்பட்டு உறுத்தவில்லை என்பதே பெரிய ஆறுதல். குள்ளமாய் பூசினார் போல இருந்தாலும் அழகுதான். தியேட்டரில் தன் ஏமாற்றத்தை காட்டும் ரியாக்ஷன் ஒன்றே போதும். பார்ப்பவர்கள் மனதை கலைப்பதற்கு. ஆனால் நடிப்பு என்று வரும் போது காதல் வயப்படும் காட்சிகளில் நித்யா மேனன் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால், தன் கணவனை மீண்டும் காணும் போது ஏற்படும் உணர்ச்சிகளை ப்ரியா ஆனந்த் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஹவுஸ் ஓனர் கீதா-மௌலி தம்பதியில் ஆரம்பித்து, தோழியாக வரும் டீன் ஏஜ் பெண் வரைக்கும் எல்லாருமே மனசுக்குள் வந்து ஹாய் சொல்லிவிட்டு போகிறார்கள். ஆந்திரா வாடைக்காக எம்.எஸ்.நாராயணா, தணிகலபரணி.

படத்தின் ஹை-லைட்டே ஒளிப்பதிவுதான்! படத்தின் கதாநாயகன் யார் என்றால் அதுவும் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன் தான். இதுவரை அமெரிக்கா என்றால் சட்டென சொல்லும்படியாய் லொக்கேஷன்கள் இல்லாமல், புது லொக்கேஷன்கள், அருமையான ஒளியமைப்பு செய்த ஷாட்டுகள், என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார். முக்கியமாய் ரெட் ஒன் கேமராவின் அத்தனை சாத்தியங்களையும் செவ்வனே பயன்படுத்தி ஒரு ரிச்சான விஷுவல்களை அளித்திருப்பது பாராட்டுக்குறியது. பேண்டம் ப்ளெக்ஸ் கேமராவில் படம்பிடிக்கப்பட்ட பாடல் காட்சிகளில் ஸ்லோமோஷன் காட்சிகள் அற்புதம். அவரது கேமரா கங்கை, சென்னை, அமெரிக்கா என கண்டம் தாண்டியும், கடல் தாண்டியும் விரிகிறது. மிக நேர்த்தியான கலர் கரெக்ஷன். ஒவ்வொரு பிரேமையும் கண்களில் ஒத்திக்கொள்ளலாம். கிஷோரின் எடிட்டிங் சூயிங்கம் மாதிரி. ஆரம்பத்தில ஸ்வீட்டா.. அப்புறம் மெல்ல மெல்ல ஜவ்வு!

படத்திற்கு கேரள இசையமைப்பாளர் சரத். முக்கியமாய் கார்த்திக் பாடியுள்ள ‘நீ கோரினால்’ நல்ல மெலடி. ‘நியாயம் தானா காயம் தானா’ என்ற பாடலை வித்தியாசமாக பாடுகிறேன் என்று வார்த்தைகளை புரிந்துகொள்ளாத அளவுக்கு கொலை செய்தது நியாயந்தானா? அராபியன் ஸ்டைலில் சரத் பாடியுள்ள பாடல் சிச்சுவேஷனுக்கு பொருந்தினாலும் தனிப்பட விதத்தில் பெரிய இம்பாக்டை கொடுக்கவில்லை. பாடல்கள் எதுவும் காதிலும், மனதிலும் பதியவில்லை என்பது பெரும் குறை! பலஹீனமான கதை-திரைக்கதைக்கு பலம் சேர்க்க வேண்டிய இசை சொதப்பினால் படம் படுத்து விடாதோ?!! பின்னணி இசையில் மனசை குழைத்து மருதாணி போட்டிருக்கிறார். இருந்தாலும் அடிக்கடி செண்டை மேளத்தை அடித்து ஊர் பாசத்தை காட்டியிருக்க வேண்டாம் சேட்டா..

கதை என்னவோ எங்கேயோ, எப்போதோ பார்த்தது போலத்தான் இருக்கும். ஆனாலும், அதை புதிதாக காட்ட ஜெயந்திரா மற்றும் சுபா உருவாக்கியிருக்கும் திரைக்கதையும், அதை இயக்குநர் ஜெயந்திரா படமாக்கிய விதமும் கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு ஷாட்டும் மிக அற்புதமாக வடிவமைத்திருக்கிறார். பாடலின் நடுவே மாண்டேஜில் வரும் குட்டிக் காட்சிகள் மூலமே கதையை நகர்த்துவது சுவாரஸ்யம். அதே போல வசனங்கள் ஷார்ப். சுபாவின் வசனங்கள் சில இடங்களில் கைதட்ட வைக்கின்றன. ப்ரியா ஆனந்திற்கும், சித்தார்த்துக்கு இடையே காதல் மூளும் காட்சிகளில் இளமை. அதிலும் ஸ்டெத் வைத்து பார்க்கும் போது காதில் கேட்கும் ‘புது வெள்ளை மழை’ படு இண்ட்ரஸ்டிங். ப்ரியா ஆனந்த் கிஃப்ட் செய்யும் பெரிய டி.ஷர்ட் மணிரத்னத்தின் டச்.. படு நச்! முதல் பாதியில் கொஞ்சம் செட்டிலாவதற்கு நேரம் எடுத்துக் கொண்டாலும், நிஜத்தையும், ப்ளாஷ்பேக்கையும் இணைத்து கதை சொன்ன விதம் ஆர்வத்தை தூண்டும்படியாகவே இருந்தது. இரண்டாவது பாதியில் மெதுவாக செல்லும் திரைக்கதைதான் லேசாய் காலை வாரி விட்டது என்று சொல்ல வேண்டும். முக்கியமாய் சித்தார்த்தின் நிலையை விரிவாக காட்டினாலும், அது நம் மனதினுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் கொஞ்சம் அமெரிக்க தனமாய் இருப்பது கதையுடன் பயணிக்க தடையாய் உள்ளது.

படத்தோட ஸ்டில்ஸை பார்த்து இளமை துள்ளலோடு வந்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனால் கலர்ஃபுல்லான படம் விரும்பும் சிட்டி யூத்துகளுக்கு செம ட்ரீட்தான். படத்த அழகா எடுக்க எவ்வேளா மெனக்கெட்டிருப்பாங்களோ..? அதை திரைக்கதை அமைப்பதில் மெனக்கெட்டிருந்தால் நிச்சயம் ரிச்சான ட்ரீட்தான்!

கணக்குல 360 டிகிரி என்பது ஒரு வட்டம். அதுபோல படத்தில புதுமை விரும்பி பாதி வட்டத்தை சுற்றிருக்கிறார். வாழ்க்கையின் ஒரு பகுதியை சொல்ல முற்பட்டிருக்கிறார். மீதியை அடுத்த படத்தில் சுற்றலாம் என விட்டுவிட்டார் போல…!

180 – அரைவட்டம்!

நடிகர்கள்
சித்தார்த், ப்ரியா ஆனந்த், நித்யா மேனன், மௌலி, கீதா, ஜானகி சபேஷ், தணிகலபரணி, எம்.எஸ்.நாராயணா, லஷ்மி ராமகிருஷ்ணன்
இசை
சரத்
இயக்கம்
ஜெயந்திரா
தயாரிப்பு
கிரண் ரெட்டி, ஸ்வரூப் ரெட்டி, சி.ஸ்ரீகாந்த்

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam