
எந்திரனை ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பு என்று சொல்வதா? இல்லை சூப்பர் ஸ்டாரின் சினிமா வாழ்க்கையில் தனது ரசிகர்களுக்கு அவர்தரும் மிகச்சிறந்த ட்ரீட் என்று சொல்வதா? இப்படியொரு விவாவதத்தை நடத்திக்கொண்டிருகிறார்கள் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்கள்!
ஹாலிவுட்டை கோலிவுட்டுக்குக் கொண்டு வந்து இரண்டும் ஒன்றுதான் என்று காட்டநினைத்த ஷங்கரின் கனவுப்படம், தமிழ் சினிமாவை தொழில்நுட்பரீதியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் படம், ஆஸ்கர் விருதுக் கலைஞர்கள் கைகோர்த்திருக்கும் படம் என்று ரஜினி, ஷங்கர் கூட்டணி படமாக மட்டும்மல்லாமல் தமிழர்களின் படமாக உருவாகியிருகிறது எந்திரன் என்கிறார்கள் உதவி இயக்குனர்கள். எப்போது ரிலீஸ் என்று கேட்டால் ஆகஸ்ட் 15 அல்லது செப்டம்பர் 3 இரண்டில் எந்த தேதி என்பதை இசை வெளியீட்டில் சன் பிக்ஸர்ஸ் அறிவிக்க இருப்பதாக தகவல் தருகிறார்கள்.
எந்திரன் பற்றிய இன்னொரு செய்தி ரசூல் பூக்குட்டி பற்றியது. ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டிதான் படத்துக்கான ஒலிகளை சிறப்பாக உருவாக்கினார். ஆனால் எந்திரனுக்கு இன்னும் சிறப்பான ஒலிகள் தேவை என்று ஷங்கர் சொல்ல, கடந்த ஜூன் மாதமே ரசூல் பூக்குட்டி, ஹாலிவுட்டில் பணிபுரியும் தனது நண்பர் குணால் ராஜனையும் தன்னுடன் ஒலிப்பணிக்காக சேர்த்துக்கொண்டிருக்கிறார். ஆஸ்கர் ரஹ்மான் இசையில் மொத்தம் ஆறு பாடல்கள் படத்தில் இடம் பெறுகிறது. இதில் மெலடி, வெஸ்டர்ன், ஃபேன்டஸி என எல்லா ரகங்களிலும் பாடல்கள் உண்டாம்.
எந்திரனில் 3டி இருக்கிறது என ஆச்சரியம் தருகிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். டெர்மினேட்டர், அவதார் படங்களில் பணிபுரிந்த ரோபோட்ராணிக்ஸ் கலஞர்கள், எந்திரன் படத்திலும் பணிபுரிந்திருகிறார்கள். எந்திரன் 3டி படமாக இல்லையென்றாலும் 3டி படத்தை கண்ணால் பார்ப்பது போன்ற காட்சியமைப்புக்கள் இருக்கும். குறிப்பாக சிங்கிள் பாய்ண்ட் பெர்ஸ்பெக்டீவ், டெப்த் ஆஃப் பீல்ட் ஆகிய இரண்டு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை உருவாக்கியிருகிறார்களாம்!