துரோகி’ படத்தை முடித்துவிட்டார் பூனம் பஜ்வா. ‘தம்பிக்கோட்டை’யிலும் ஒரு பாடலை மட்டும் முடிக்க காத்திருக்கிறார்.
‘துரோகி’யில் உங்கள் கேரக்டர்?
இதில் நடிக்கும் ஸ்ரீகாந்த், விஷ்ணு, நான், பூர்ணா என அனைவருக்குமே வெவ்வேறு விதமான கேரக்டர், லுக் படத்தில் இருக்கும். எனது வேடம், கிளாமர், ஹோம்லி என பிரித்துவிட முடியாதபடி இருக்கும். அதே நேரம் அதை திரையில் கொண்டு வருவதில் மிகவும் சிரமப்பட்டேன். அந்த அளவுக்கு ஆழமான கேரக்டரில் நடித்துள்ளேன்.
ஷூட்டிங் அனுபவம்?
ஷூட்டிங் தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, கதையை இயக்குனர் சுதா கொடுத்துவிட்டார். அதை படித்தபோது, ஒவ்வொரு காட்சி பற்றிய விளக்கமும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்பதும் தெளிவாக இருந்தது. இதனால் ஷூட்டிங்கில் 2 டேக்குகளுக்கு மேல் யாருமே நடித்ததில்லை. முதல் முறையாக பெண் இயக்குனருடன் பணியாற்றினேன். இதனால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது.
பூர்ணாவும் இருக்கிறார். யாருக்கு முக்கியத்துவம்?
இதில் எல்லோருக்குமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இவர்தான் நம்பர் ஒன், இவர் நம்பர் டூ என யாருமே இல்லை. அதே நேரம், எங்கள் இருவரின் கேரக்டர்களும் எதிர்மாறாக இருக்கும்.
‘தம்பிக்கோட்டை’ பற்றி?
இப்படத்தில் கிராமத்து பெண். ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து விஷயங்களுமே படத்தில் இருக்கும். 90 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி.
அடுத்து?
தமிழில் மேலும் இரு படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. ஆகஸ்ட்டில் அதன் ஷூட்டிங் தொடங்கலாம். தெலுங்கிலும் வாய்ப்பு வருகிறது. ஆனால், டூயட் மட்டுமே பாடுவது போன்ற கேரக்டராக வருவதால் ஏற்கவில்லை. வெறும் டூயட்டுக்கும், கிளாமருக்கும் மட்டும் நான் எதற்கு? நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள கதையை எதிர்பார்த்திருக்கிறேன்.
