விஜய்-அசின் நடிப்பில் சித்தீக் இயக்கி வரும் படம் ‘காவல் காதல்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திங்களன்று நடந்தது. இதில் கலந்துகொள்ள தனது மெய்க்காப்பாளர்களோடு பந்தாவாய் வந்தார் அசின்.
சென்னை செல்லவே பயமாக இருக்கிறது என்று சொல்லிவந்த அசினுக்கு படக்குழுவினரும், விஜயும் அமர்க்களமாய் வரவேற்பளித்தனர். இதனால் அசினுக்கு சந்தோஷம் தாங்க முடியலையாம். இதில் அவருக்குக் கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு வேறு.
அவருக்கு எந்தவித எதிர்ப்போ, மறுப்போ இல்லாதது குறித்து கோடம்பாக்கமே ஆச்சரியப்பட்டு நிற்கிறதாம்.
இலங்கையில் நடந்த ‘ரெடி’ படப்பிடிப்புக்கு அசின் சென்றதால் திரை வட்டாரத்தில் எழுந்த எதிர்ப்பலை, இலங்கை ஜனாதிபதி மனைவியுடன் ஜோடியாக ‘ஃபோஸ்’ கொடுத்துச் சுற்றிய போது சுனாமியாக மாறியது.
ஆனாலும் அவற்றை எல்லாம் துளியும் பொருட்படுத்தவில்லை அசின்.
தென்னிந்தியத் திரைப்பட கூட்டமைப்புகளின் தடையை மீறி இலங்கை சென்ற அசின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி மற்றும் சத்யராஜ் போன்றோர் கொதித்தெழுந்தனர்.
அதே நேரம் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆதரவு தருவதை போன்று நடிகர்கள் தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவர்களுக்கு யாரும் தடைவிதிக்க கூடாது என்று கூறிவிட்டார். இது அசினுக்கு சாதகமாக அமைந்தது.
(அப்படி சரத்குமார் கூறாவிட்டாலும் அசினுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. அப்படியே ஏற்பட்டாலும் அதில் அசினுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏன்னா… அம்மணி கடல் கடந்தப் பறவையாயிற்றே…)
‘காவல் காதல்’ படப்பிடிப்பு முடிவடையும் உச்சக்கட்டத்தை அடைந்து வருகிறது. அதற்கு முன்பாகவே அசின் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் விரைவில் முடித்துவிட வேகம் காட்டிவருகிறது படக்குழு.
காரணம், ‘ரெடி’ படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு மீண்டும் இலங்கைச் செல்லவிருக்கிறாராம் அசின்.